search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய மந்திரி தகவல்"

    தொழிலாளர்கள் காப்பீட்டு திட்டத்தின் பலன்களை பெற விதி முறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன என்று மத்திய மந்திரி சந்தோஷ்குமார் கங்குவார் கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார்பேட்டை புவன்கரே வீதியில் இ.எஸ்.ஐ. (தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம்) மண்டல அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் ரூ.6 கோடியே 41 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    புதுப்பிக்கப்பட்ட இ.எஸ்.ஐ. மண்டல அலுவலகத்தை மத்திய மந்திரி சந்தோஷ் குமார் கங்குவார் திறந்து வைத்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் 1966-ம் ஆண்டு தொழிலாளர் காப்பீட்டு கழகம் 12 ஆயிரம் தொழிலாளர்களுடன் தொடங்கப்பட்டது. தற்போது 1 லட்சத்து 5 ஆயிரம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சுமார் 4 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 175 படுக்கை வசதிகளுடன், 12 சிறிய மருத்துவ பிரிவுகளும், கிளை அலுவலகமும், மண்டல அலுவலகமும் இயங்கி வருகிறது. தற்போது ரூ.6 கோடியே 41 லட்சம் செலவில் கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு தொழிலாளர்களின் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் பெற்று வரும் பென்ஷன் தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் நாடு முழுவதும் பயனடைந்துள்ளனர்.

    தொழிலாளர் காப்பீட்டு கழகம் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தங்கள் செல்போனை பயன்படுத்தி இந்த செயலி மூலம் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்கள் தெரிவிக்கும் புகாருக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது. காப்பீடு திட்டத்தின் பலன்களை தொழிலாளர்கள் பெற விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் அமைச்சர் கந்தசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுவை மாநில முன்னேற்றத்துக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வழங்கியுள்ளது. பல்வேறு துறைகள் இங்கு வந்துள்ளன என்றால் மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தை மக்கள்தொகையின் அடிப்படையில் பார்க்காமல் செய்தது தான். பல ஆண்டுகளாக இங்கே தொழிற்சாலைகள் சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது ரோடியர் மில், சுதேசி மில், பாரதி மில், கூட்டுறவுத் துறையில் இருக்கும் ஸ்பின்னிங் மில், சர்க்கரை ஆலை ஆகியவற்றை இயக்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

    புதுவையில் உள்ள தொழிற்சாலைகளை மீண்டும் நல்ல முறைக்கு கொண்டு வர மத்திய மந்திரியும், நாடாளுமன்ற உறுப்பினரும் புதுவைக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி வாங்கித்தர வேண்டும். ரோடியர் மில்லை தொடர்ந்து இயக்க மத்திய அரசிடம் இருந்து அதிக நிதியை பெற்றுத்தர வேண்டும் அல்லது அந்த மில்லுக்கு சொந்தமான நிலத்தை விற்று தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுக்க ஒப்புதல் தர வேண்டும். இது தொடர்பான கோப்பு பல ஆண்டுகளாக மத்திய உள்துறை அமைச்சகத்தில் உள்ளது.

    ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு குறைவான நிதி வழங்கப்படுகிறது. எனவே கூடுதலாக நிதி கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். புதுச்சேரியில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவர முதல்-அமைச்சர் தலைமையில் முயற்சிகள் எடுத்து வருகிறோம்.

    கிராமப்புற தொழிலாளர்கள் விடுப்பு பணம் வாங்க முதலியார்பேட்டையில் உள்ள அலுவலகத்திற்கு வரவேண்டியுள்ளது. ஆகவே தவளக்குப்பம், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒரு பகுதியில் இ.எஸ்.ஐ. கிளை அலுவலகம் திறக்க வேண்டும்.

    புதுவையில் ஆட்சி செய்வது எந்த அரசு என்பதை பார்க்க வேண்டாம். இந்திய நாட்டு மக்கள் என்பதை பார்த்து கூடுதல் நிதி பெற்றுத்தர வேண்டும். அப்போதுதான் நிறைய திட்டங்கள் மக்களை சென்றடைய முடியும். புதுச்சேரிக்கு ரூ.1,000 கோடி நிதி பெற்றுக்கொடுத்தால் தான் நிலுவையில் உள்ள அரசு ஊழியர் சலுகை, சார்பு நிறுவனங்களில் இருக்கின்ற தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகை, நிலுவையில் உள்ள திட்டங்கள் போன்றவற்றை செயல்படுத்த முடியும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் புதுவை அரசு தொழிலாளர் துறை செயலாளர் சுந்தரவடிவேலு, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், இ.எஸ்.ஐ. தலைமை இயக்குனர் ராஜ்குமார், புதுவை மண்டல இயக்குனர் தாசு, காப்பீட்டு கழக கூடுதல் ஆணையர் மணி மற்றும் பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மண்டல அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.



    அனைத்து தபால் நிலையங்களிலும் விரைவில் வங்கி சேவை செயல்படுத்தப்படும் என்று குழித்துறையில் மத்திய மந்திரி மனோஜ் சின்கா கூறினார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் குழித்துறையில் உள்ள தபால் நிலையம் திருவிதாங்கூர் சமஸ்தான காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. இந்த தபால் நிலையத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, ரூ.2 கோடியே 25 லட்சம் செலவில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    புதிய கட்டிடத்தை மத்திய தொலை தொடர்பு மந்திரி மனோஜ் சின்கா திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். புன்பு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு இந்தியா முழுவதும் தபால் நிலையங்கள் மூலம் 300 பாஸ்போர்ட் சேவை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 214 பாஸ்போர்ட் சேவை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

    2019-ம் ஆண்டுக்குள் 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு பாஸ்போர்ட் சேவை மையம் அல்லது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பாஸ்போர்ட் மையம் என்கிற நிலையை நிறைவேற்ற உள்ளோம்.

    கிராமப்புற தபால் நிலையங்கள் உள்பட அனைத்து தபால் நிலையங்களிலும் அனைத்து விதமான வங்கி சேவைகளை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளோம். இதனால் கிராம பகுதி மக்கள் அனைவரும் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    ×